Saturday, November 08, 2014

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா?

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா? -எ.அ.பாலா



செஸ் ஆனந்த் குறித்து நான் முன்னர் எழுதிய இடுகைகள்:

http://idlyvadai.blogspot.in/2012/06/blog-post.html
http://idlyvadai.blogspot.in/2013/11/blog-post_17.html
http://balaji_ammu.blogspot.in/2013/11/deccan-chronicle.html

2007லிருந்து தொடர்ச்சியாக 6 ஆண்டுகள், (5 முறை) உலக செஸ் சேம்பியனாக வலம் வந்த ஆனந்த், சென்ற வருடம் சென்னையில் நடந்த உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில் இளம் செஸ் ஜாம்பவான் கார்ல்சனிடம் தோல்வியடைந்தபோது, பலரும் அவரது செஸ் வாழ்க்கைக்கு இறப்பறிக்கை எழுதி விட்டனர். அதற்குக் காரணம், 43 வயது ஆனந்தின் மனத்தளர்ச்சியும், முடிவாட்ட திறமைக்குறைவும் கார்ல்சனுக்கு எதிரான சில ஆட்டங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனந்த் ரிடையர்மெண்ட்டை அறிவித்து விடுவார் என்று தான் நானும் நினைத்தேன்.

ஆனால், உண்மையான சேம்பியன்கள் தடாலடியாக முடிவெடுப்பதில்லை! சில மாதங்கள் ஓய்வுக்குப் பின், மார்ச் 2014ல் ரஷ்யாவில் நடைபெற்ற (கார்ல்சனுக்கு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும்) Candidates போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் (கிராம்னிக், டோபலோவ், ஆரோனியன், ஆண்ட்ரிகின், மமெதயரோவ், கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர்) பங்கு கொண்ட அந்த மிகக்கடினமான 14 சுற்றுகள் கொண்ட போட்டியில், மிகத் திறமையாக, புது உத்வேகத்துடன் விளையாடி, இறுதிச்சுற்றுக்கு முன்பாகவே, டோர்னமண்ட்டை வென்று, மீளொரு முறை 2014 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்ள தகுதி பெற்றார். நிச்சயமாக யாருமே எதிர்பார்க்காத விஷயமிது! ஆனந்தின் செஸ் மீதான காதல் அத்தகையது.

Candidates tournament பற்றி வாசிக்க:
http://www.thechessdrum.net/blog/2014/03/31/world-candidates-2014-14-anand-wins-naysayers-silenced/

உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டி இன்று (8 நவம்பர் 2014, மாலை 5.30) தொடங்குகிறது. எப்போதும் போல 12 கிளாசிக்கல் செஸ் ஆட்டங்கள் வாயிலாக, சேம்பியன் நிர்ணயிக்கப்படுவார். அதாவது, யார் முதலில் 6.5 புள்ளிகளைத் தொடுகிறாரோ அவரே சேம்பியன். 6-6 என்று நிலையில், 4 துரிதவகை செஸ் ஆட்டங்கள் நடைபெறும். இப்போட்டியிலும், ஆனந்த் under dog-ஆகத் தான் கருதப்படுகிறார் என்றாலும், அது அவருக்கு நல்லதே. சென்ற முறை அவர் சேம்பியனாக இருந்ததும், போட்டி சென்னையில் நடைபெற்றதும், அவருக்கு சற்று மன அழுத்தத்தை ஏற்படுத்தி பாதகமாகவே அமைந்தன. இம்முறை ஆனந்த் தனது இயற்கையான, சற்றே அதிரடியான ஆட்டத்தை (2013 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியின் 9வது ஆட்டம் போல) கைக்கொள்ளலாம்! அது பலன் தரும் என்பது என் எண்ணம். தற்காப்பு வகை ஆட்டம், ஒரு கால்பந்து ஆட்டக்காரருக்கு நிகரான கார்ல்சனிடம் பலனளிக்காது!

விஷி ஆனந்த் இன்று எழுதியிருப்பதை வாசிக்க: It is time to get into match mode!
http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=It-is-time-to-get-into-match-mode-08112014017005

மேலும், கார்ல்சன் இவ்வருடம் நடைபெற்ற சில போட்டிகளில் சோபிக்கவில்லை. அதனால், முதல் 6 ஆட்டங்களில் சமநிலை இருப்பின், அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. செஸ் ஆட்டக்காரர்கள் பலர், ஆனந்த் இம்முறை நல்ல மனநிலையிலும், முன்னேற்பாடுடனும் இருக்கிறார் என்று கருதினாலும், தனது 44 வயதில், கார்ல்சனை வென்று ஆனந்த் மீண்டும் உலக சேம்பியன் ஆவது எளிதன்று. முக்கியமாக, முடிவாட்ட நிலை (End Game position) என்பது எளிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் இருக்குமாறும், நீண்ட ஆட்டங்கள் தரும் சோர்வினால் ஆட்டத்தில் தவறுகள் (Blunders) ஏற்படாமலும் ஆனந்த் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

---எ,அ,பாலா

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails